ரிஷப் பண்டிற்கு அபராதம் விதிக்க வேண்டும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் விமர்சனம்


ரிஷப் பண்டிற்கு அபராதம் விதிக்க வேண்டும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் விமர்சனம்
x

image courtesy:PTI

தேவையற்ற விஷயங்களுக்காக வாக்குவாதம் செய்யும் வீரர்களுக்கு அபராதம் விதிப்பதற்கான அதிகாரத்தை நடுவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி 18.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் படிக்கலுக்கு எதிராக இஷாந்த் சர்மா வீசிய ஒரு பந்தை நடுவர் வைட் என்று அறிவித்தார். அப்போது அதற்கு எதிராக டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ரிவியூ எடுத்தார். அதை சோதித்த 3வது நடுவர் மீண்டும் வைட் வழங்கியதால் டெல்லி ஒரு ரிவ்யூவை இழந்தது. அதனால் அதிருப்தியடைந்த ரிஷப் பண்ட் களத்தில் இருந்த நடுவருடன் 3 - 4 நிமிடங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கில்கிறிஸ்ட் விமர்சனம்:

இந்நிலையில் ரிஷப் பண்ட் போன்ற தேவையற்ற விஷயங்களுக்காக வாக்குவாதம் செய்யும் வீரர்களுக்கு அபராதம் விதிப்பதற்கான அதிகாரத்தை நடுவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"எந்த வகையான கிரிக்கெட்டிலும் நடுவர்கள் போட்டியை சிறப்பாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கு இன்றிரவு மற்றொரு உதாரணத்தை நான் பார்த்தேன். அவர்கள் போட்டியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு சிறந்த வேலையை செய்ய வேண்டும். அங்கே ரிஷப் பண்ட் ரிவியூ செய்தாரா என்பதில் முதலில் பிரச்சினை ஏற்பட்டது. ரிவியூ எடுத்ததில் குழப்பம் இருந்ததால் அது பரவாயில்லை.

ஆனால் அவர்கள் அங்கேயே நின்று அதைப்பற்றி 3 - 4 நிமிடங்கள் பேசினார்கள். அது மிகவும் எளிமையான உரையாடல் என்று நான் நம்புகிறேன். ரிஷப் எவ்வளவு புகார் கொடுத்தாலும் சரி, வேறு எந்த வீரர் இது போன்ற புகாரை செய்தாலும் சரி "அது முடிந்து விட்டது" என்று நடுவர்கள் அவர்களிடம் சொல்லி விட்டு விரைவாக செல்ல வேண்டும். ஆனால் அதையும் தாண்டி வீரர்கள் தொடர்ந்து பேசினால் அபராதம் விதிக்க வேண்டும்" என்று கூறினார்.


Next Story