கெய்க்வாட்டின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்ததே தோல்விக்கு காரணம் - ஆஸி. முன்னாள் வீரர் விமர்சனம்


கெய்க்வாட்டின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்ததே தோல்விக்கு காரணம்  - ஆஸி. முன்னாள் வீரர் விமர்சனம்
x

image courtesy: twitter/ @ChennaiIPL

தினத்தந்தி 6 April 2024 9:51 AM GMT (Updated: 6 April 2024 10:02 AM GMT)

ஐதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு சென்னை கேப்டன் கெய்க்வாட்டின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்ததே காரணம் என மேத்தியூ ஹெய்டன் விமர்சித்துள்ளார்.

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது 4-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று விளையாடியது. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு தொடரில் தலா 2 வெற்றி மற்றும் தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்த போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு பேட்டிங்கில் கூடுதலாக 15 - 20 ரன்கள் எடுக்க தவறியது, டிராவிஸ் ஹெட் கொடுத்த கேட்ச்சை தவற விட்டது போன்ற பல்வேறு சொதப்பல்கள் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்ததே தோல்விக்கு காரணமாக அமைந்தது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான மேத்தியூ ஹெய்டன் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"அவருடைய சில முடிவுகள் கூர்மையாக இல்லை. பந்து வீச்சில் 2 விக்கெட்டுகள் எடுத்து பங்காற்றிய ஆல் ரவுண்டர் மொயின் அலியை பேட்டிங்கில் மேலே களமிறக்கியிருக்க வேண்டும். அவருக்கு அடித்து விளையாடுவதற்கான சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

சென்னை அணி பவர் பிளே ஓவர்களுக்குள் தடுமாறினார்கள். என்னைப்பொறுத்த வரை அந்த இடத்தில் ஒருவர் தைரியமாக விளையாடியிருக்க வேண்டும். அதை மொயீன் அலி செய்திருப்பார். அதேபோல பந்து வீச்சில் அவர் டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக தீக்சனாவை ஆரம்பத்திலேயே கொண்டு வந்திருக்க வேண்டும். 4-வது ஓவர் வரை காத்திருக்க வேண்டியதில்லை" என்று கூறினார்.


Next Story