நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இலங்கை அணிக்கு அபராதம்


நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இலங்கை அணிக்கு அபராதம்
x

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் வருகிற 31-ந் தேதி நடக்கிறது.

கிறைஸ்ட்சர்ச்,

இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடக்க இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் வருகிற 31-ந் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இலங்கை அணி இருக்கிறது.

இதற்கிடையே, ஆக்லாந்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்காமல் கூடுதல் நேரம் எடுத்து கொண்டதாக இலங்கை அணி மீது எழுந்த புகாரை விசாரித்த போட்டி நடுவர் ஜெப் குரோவ், இலங்கை அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளார்.


Next Story