ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஸ்டூவர்ட் பிராட்


ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஸ்டூவர்ட் பிராட்
x

கோப்புப்படம்

5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்தின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் தனது "கிரிக்கெட்டின் கடைசி ஆட்டம்" என்று அறிவித்தார். ஆஷஸ் தொடரின் முடிவில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருப்பதன்மூலம் 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஸ்டூவர்ட் பிராட் விடைபெற உள்ளார்.

நான்காவது ஆஷஸ் டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் (800), ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்ன் (708), இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (688) மற்றும் இந்திய வீரர் அனில் கும்ப்ளே (619) ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர். இந்த எலைட் கிளப்பில் ஸ்டூவர்ட் பிராட் கடைசியாக இணைந்திருந்தார். இந்தப் பட்டியலில் இடம்பெற்ற இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் இதில் அடக்கம். பிராட் 166வது டெஸ்டில் இந்தச் சாதனையை புரிந்த நிலையில் தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய ஸ்டுவர்ட் பிராட், "இது ஒரு அற்புதமான பயணம், நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து பேட்ஜ் அணிந்திருப்பது ஒரு பெரிய பாக்கியம். மேலும், நான் எப்போதும் போல் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். தற்போதைய ஆஷஸ் தொடர் ஒரு அற்புதமான தொடராக இருந்தது. இத்தொடரில் ஒரு பகுதியாக நானும் இருந்ததில் மகிழ்ச்சி. ஆஷஸ் தொடர் மிகவும் சுவாரஸ்யமாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தது. சில வாரங்களாகவே ஓய்வு குறித்து யோசித்து வந்தேன். எனக்கு ஆஷஸ் தொடர் மீது தீராக்காதல். அதனால்தான் எனது கடைசி போட்டி ஆஷசில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். நேற்று இரவு ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரிடம் எனது ஓய்வு முடிவை கூறினேன். உண்மையைச் சொல்வதானால், இது சரியான நேரம் என்று உணர்ந்ததால் இப்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.


Next Story