டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று; ஜிம்பாப்வேவுக்கு அதிர்ச்சி அளித்த உகாண்டா!


டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று; ஜிம்பாப்வேவுக்கு அதிர்ச்சி அளித்த உகாண்டா!
x

image courtesy; twitter/ @ICC

2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

விண்தோய்க்,

டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 8 டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அந்த தொடர்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

இந்நிலையில் 9வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உகாண்டா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் உகாண்டா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜிம்பாப்வேவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்தது. பின்னர் 137 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உகாண்டா அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 138 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் ஜிம்பாப்வே அனி டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. முன்னதாக ஜிம்பாப்வே தனது முதல் ஆட்டத்தில் நமீபியா அணியிடம் தோல்வி கண்டிருந்தது.


Next Story