டி20 உலகக் கோப்பை: முடிவுக்கு வரப்போகும் 'சூப்பர் 12' சுற்று- அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?


டி20 உலகக் கோப்பை: முடிவுக்கு வரப்போகும் சூப்பர் 12 சுற்று- அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 3 Nov 2022 2:31 PM GMT (Updated: 3 Nov 2022 2:35 PM GMT)

சூப்பர் 12 சுற்று முடிவுக்கு வர போகும் நிலையில் தற்போது வரை ஒரு அணி கூட அதிகாரபூர்வமாக அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை.

சிட்னி,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) மோதின. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இதனால் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 9 ஓவர்களில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து விளையாடி வந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது.

போட்டி நேரம் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 14 ஓவர்களில் 142 ரன்கள் ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்கவைத்துள்ளது. லீக் போட்டிகளின் முடிவில் இரண்டு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அந்த வகையில் குரூப் பி பிரிவில் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் மீதம் உள்ள ஒரு இடத்திற்கு பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இன்றைய வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வி என புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இடத்திலும் உள்ளது.

சூப்பர் 12 சுற்று முடிவுக்கு வர போகும் நிலையில் தற்போது வரை ஒரு அணி கூட அதிகாரபூர்வமாக அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. இந்த நிலையில் குரூப் பி பிரிவில் ஒரே நாளில் இதற்கு முடிவு கிடைக்கவுள்ளது.

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியையும், பாகிஸ்தான் அணி வங்காளதேச அணியையும், இந்திய அணி ஜிம்பாப்வே அணியையும் வரும் 6-ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளும் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெறுகிறது.

ஒருவேளை அன்று நடக்கும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் (7 புள்ளிகள்) நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். அன்றைய நாளின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தினாலும் (6 புள்ளிகள்) , இந்தியா ஜிம்பாப்வேக்கு எதிராக வெற்றி பெற்றால் (8 புள்ளிகள்) பாகிஸ்தான் அணி வெளியேறும். இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

ஒருவேளை தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டு பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தினால் இரு அணிகளும் 6 புள்ளிகளுடன் சம நிலையில் இருக்கும். பின்னர் ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளின் அரையிறுதி வாய்ப்பு முடிவாகும்.

ஒருவேளை பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி, எதிர்பாராத விதமாக ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தால் இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் புள்ளிகள் சமமாகும். பின்னர் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் அரையிறுதி வாய்ப்பு முடிவாகும்.

இந்த அனைத்து சாத்தியங்களிலும் பாகிஸ்தான் அணி முதலில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story