டெஸ்ட் கிரிக்கெட்; அதிக முறை 5 விக்கெட்டுகள் - அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்த அஸ்வின்


டெஸ்ட் கிரிக்கெட்; அதிக முறை 5 விக்கெட்டுகள் - அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்த அஸ்வின்
x

Image Courtesy: AFP

இங்கிலாந்தின் 2வது இன்னிங்சின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ராஞ்சி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் 353 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட்122 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 103.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 307 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் துருவ் ஜூரேல் 90 ரன்னும், ஜெய்ஸ்வால் 73 ரன்னும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 53.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிராவ்லி 60 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா தரப்பில் ரோகித் 24 ரன்னுடனும், ஜெய்ஸ்வால் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 152 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் 2வது இன்னிங்சின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற கும்ப்ளேவின் (35 முறை) சாதனையை சமன் செய்தார்.

அஸ்வின் 99 போட்டிகளில் ஆடி இந்த சாதனையை படைத்துள்ளார். அதேவேளையில் கும்ப்ளே 132 போட்டிகளில் ஆடி இந்த சாதனையை படைத்துள்ளார். உலக அளவில் இந்த பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (67 முறை) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே (37 முறை) 2ம் இடத்திலும், நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹார்ட்லி (36 முறை) 3ம் இடத்திலும் உள்ளனர். அஸ்வின் 4ம் இடத்திலும் , கும்ப்ளே 5ம் இடத்திலும் உள்ளனர்.


Next Story