உங்களது மதிப்புமிக்க அறிவுரைக்கு நன்றி.. தோனி குறித்து முஸ்தபிசுர் ரஹ்மான் உருக்கம்


உங்களது மதிப்புமிக்க அறிவுரைக்கு நன்றி.. தோனி  குறித்து முஸ்தபிசுர் ரஹ்மான் உருக்கம்
x

சென்னை அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தாயகம் திரும்பினார்.

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 50 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இதன் முடிவில் ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ மற்றும் ஐதராபாத் அணிகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி தலா 5 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 4 போட்டிகளில் குறைந்தது 3-ல் வெற்றி பெற்றால் அந்த அணி எந்த வித சிக்கலுமின்றி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விடும். இந்த சூழலில் சென்னை அணியில் இடம் பிடித்திருந்த வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தாயகம் திரும்பினார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக சிஎஸ்கே வீரர் முஸ்தபிசுர் வங்காளதேசம் திரும்பினார். இந்நிலையில் முஸ்தபிசுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

எல்லாவற்றிற்கும் நன்றி மஹி பாய். உங்களைப் போன்ற ஜாம்பவான்களுடன் விளையாடியது ஒரு சிறப்பு உணர்வாக இருந்தது. ஒவ்வொரு முறையும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. உங்கள் மதிப்புமிக்க அறிவுரைகளுக்கு நன்றி. நான் அந்த விஷயங்களை நினைவில் கொள்கிறேன். விரைவில் உங்களுடன் மீண்டும் சந்தித்து விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். என தெரிவித்துள்ளார்.


Next Story