டி.என்.பி.எல் 2-வது தகுதி சுற்று: நெல்லை ராயல் கிங்ஸ் 208 ரன்கள் குவிப்பு..!


டி.என்.பி.எல் 2-வது தகுதி சுற்று: நெல்லை ராயல் கிங்ஸ் 208 ரன்கள் குவிப்பு..!
x

image courtesy: TNPL twitter

நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.

கோவை,

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதில் கோவையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்சும் மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நெல்லை அணி முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களுக்குள் வந்ததால் அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீ நிரஞ்சனும், சூரியபிரகாஷும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

ஸ்ரீ நிரஞ்சன் 34 ரன்களும், சூரியபிரகாஷ் 25 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பாபா அபராஜித் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் அதிரடியாக விளையாடி வந்த சஞ்சய் யாதவ் 26 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் அஜிதேஷ் அதிரடி காட்டி 38 ரன்கள் எடுக்க, நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story