டிஎன்பிஎல்: திருச்சி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் வெற்றி..!


டிஎன்பிஎல்: திருச்சி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் வெற்றி..!
x

image courtesy: TNPL twitter

தினத்தந்தி 10 July 2022 5:23 PM GMT (Updated: 10 July 2022 5:38 PM GMT)

கோவை கிங்ஸ் அணி 138 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கோவை,

6-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று கோவையில் அடுத்த கட்ட லீக் போட்டிகள் தொடங்கின. இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் -கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது.

திருச்சி அணியில் தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் 18 ரன்னில் அவுட்டானார். நிதிஷ் ராஜகோபால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். சந்தோஷ் ஷிவ் 28 ரன்னில் வெளியேறினார். நிரஞ்சன் 17 ரன்னிலும், ஆகாஷ் சும்ரா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் முரளி விஜய் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், திருச்சி அணி 135 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டும், ஷாருக் கான், திவாகர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, கோவை அணி 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

கோவை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஶ்ரீதர் ராஜூ மற்றும் சுரேஷ் குமார் இருவரும் முறையே 27 மற்றும் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய சாய் சுதர்சன் 27 ரன்கள், சிஜித் சந்திரன் 17 ரன்கள், முகிலேஷ் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்த நிலையில் 17-வது ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 138 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 24 ரன்கள், அபிஷேக் தன்வார் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து 18 பந்துகள் மீதம் வைத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story