விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஆண் குழந்தை: பெயரை அறிவித்த பெற்றோர்


விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஆண் குழந்தை: பெயரை அறிவித்த பெற்றோர்
x

உங்களது வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களையும் எதிர்பார்க்கிறோம் என விராட் கோலி கூறியுள்ளார்.

மும்பை,

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு அனுஷ்கா கடந்த ஐந்து வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார். கடந்த ஜனவரி 2021-ம் ஆண்டு இந்த ஜோடிக்கு வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த சூழ்நிலையில்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அனுஷ்கா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், இது குறித்து, இருவருமே உறுதிப்படுத்தவில்லை.

முதல் குழந்தை வாமிகா பிறந்தபோது எப்படி செய்தி வெளியிட்டார்களோ, அதுபோலவே, இரண்டாவது குழந்தை பிறந்த பின்புதான் அந்தச் செய்தியை ஊடகங்களுக்கு அறிவிப்பார்கள் எனவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான், கிரிக்கெட் வீரர் விராட் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு கடந்த 15-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அகாய் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அனுஷ்கா சர்மா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

விராட் கோலி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

எங்களது இதயங்களில் மகிழ்ச்சியும் அன்பும் முழுவதுமாக நிறைந்துள்ளது. எங்களுக்கு கடந்த பிப்ரவரி 15 -ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எங்களது குடும்பத்தின் புது உறுப்பினரான வாமிகாவின் சகோதரன் அகாயை இந்த உலகத்துக்கு வரவேற்கிறோம்.

எங்களது வாழ்வின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களையும் எங்களுக்கு வழங்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இந்த தருணத்தில் எங்களது தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்கும் படி உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம். அன்புடன் விராட் மற்றும் அனுஷ்கா எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story