கைகொடுத்த விராட் கோலி - நவீன்....!! நேரலையில் வர்ணித்த கம்பீர்...!


கைகொடுத்த விராட் கோலி - நவீன்....!! நேரலையில் வர்ணித்த கம்பீர்...!
x
தினத்தந்தி 12 Oct 2023 7:18 AM GMT (Updated: 12 Oct 2023 7:22 AM GMT)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புது டெல்லி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தலைநகர் டெல்லியில் நேற்று அரங்கேறிய 9-வது லீக்கில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்த இந்தியா தங்களின் 2வது வெற்றியை பதிவு செய்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 272 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சாகிதி 80 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து 273 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 16 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 131 (84) ரன்கள் குவித்து நிறைய சாதனைகளை படைத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். அவருடன் இஷான் கிசான் 47, விராட் கோலி 55, ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள் எடுத்ததால் 35 ஓவரிலேயே இந்தியா வெற்றி பெற்றது.

முன்னதாக 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் இந்தியாவின் விராட் கோலியிடம் சண்டையில் ஈடுபட்டு கை கொடுக்க மறுத்ததும் அதற்கிடையே கவுதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பெரிய சர்ச்சையாக மாறியது. அதிலிருந்தே நவீன் விளையாடும் மைதானங்களில் எல்லாம் இந்திய ரசிகர்கள் ''கோலி, கோலி'' என்று கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊரான டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நவீனுக்கு எதிராக கூச்சலிட்ட ரசிகர்களை கையசைத்து வேண்டாம் என்று விராட் கோலி கேட்டுக்கொண்டார். அதனால் நெகிழ்ந்த நவீன் தாமாக சென்று விராட் கோலியிடம் கை கொடுத்தார். அதை சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்ட விராட் கோலியும் அவருடைய தோளில் தட்டிக் கொடுத்த தருணம் மொத்த பகையையும் நட்பாக மாற்றும் வகையில் அமைந்தது. அந்த தருணத்தை இந்தி வர்ணனையில் ஈடுபட்டிருந்த கவுதம் கம்பீர் வர்ணித்தது மற்றுமொரு சிறப்பாக அமைந்தது.

அந்த தருணத்தில் கம்பீர் பேசியது பின்வருமாறு';- "நீங்கள் களத்தில் சண்டை போடலாம். களத்திற்கு வெளியே அல்ல. ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய அணிக்காகவும் வெற்றிக்காகவும் சண்டை போடலாம். குறிப்பாக நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் அல்லது எவ்வளவு நல்ல வீரர் என்பது முக்கியமல்ல. ஏனெனில் நீங்கள் உங்களுடைய அணிக்காகவும் வெற்றிக்காகவும் சண்டை போடுகிறீர்கள். அந்த வகையில் விராட் கோலி மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோரிடையே நடந்த சண்டை இந்த ஆட்டத்தில் முடிந்தது.

இந்த சமயத்தில் களத்தில் அல்லது சமூக வலைத்தளத்தில் எந்த வீரரையும் ரசிகர்கள் கிண்டலடித்து கேலி பேசக்கூடாது என்று சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் தங்களுடைய அணிக்காக முழு மூச்சுடன் விளையாடுகிறார்கள். அத்துடன் ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவது நவீனை பொறுத்த வரை மிகப் பெரிய விஷயமாகும்" என்று கூறியுள்ளார்.


Next Story