'இந்தியாவிடம் தோற்றதற்கு பழி போட்டு தப்பிக்க வேண்டாம்'- பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் கருத்திற்கு வாசிம் அக்ரம் பதில்..!!


இந்தியாவிடம் தோற்றதற்கு பழி போட்டு தப்பிக்க வேண்டாம்- பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் கருத்திற்கு  வாசிம் அக்ரம் பதில்..!!
x

image courtesy; AFP

தினத்தந்தி 16 Oct 2023 9:27 AM GMT (Updated: 16 Oct 2023 9:42 AM GMT)

உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் மோசமான தோல்வியை தழுவியது.

அகமதாபாத்,

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 3-வது வெற்றியை பதிவு செய்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா வெற்றி பெறுவதற்கு வெறும் 192 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 86 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களும் விளாசி அணியை வெற்றி பெற வைத்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதற்கு உதவினார்கள். 50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8-வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்தது.

பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் இந்த தோல்வி குறித்து கூறியதாவது:- இந்த ஆட்டத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தியதுபோல இல்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) நடத்தியதுபோல் இருந்தது. மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் இருந்தனர். பாகிஸ்தானை ஊக்கப்படுத்தும் எந்த செயல்களும் களத்தில் நிகழ அனுமதிக்கப்படவில்லை. இதுவும் ஒரு காரணம்தான். இதை நான் சாக்காக கூறப்போவது இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

மிக்கி ஆர்தரின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் அவரை கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக வாசிம் அக்ரம் கூறியதாவது:- இந்தியாவிடம் மோசமாக தோற்றதற்கு பழி போட்டு தப்பிக்க வேண்டாம் என்று மிக்கி ஆர்தரை கேட்டுக் கொள்கிறேன். குல்தீப் யாதவுக்கு எதிராக உங்களிடம் என்ன திட்டம் இருந்தது? என்று எங்களிடம் சொல்லுங்கள். அதைத்தான் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

இந்த தோல்வியில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள இப்படி பேசுகிறீர்களா? துரதிருஷ்டவசமாக உங்களால் இதில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story