பிக்பாஷ் லீக்கில் அவரை வாங்குவதற்கு போதுமான பணம் இல்லை- சூர்யகுமாரை புகழ்ந்த மேக்ஸ்வெல்


பிக்பாஷ் லீக்கில் அவரை வாங்குவதற்கு போதுமான பணம் இல்லை- சூர்யகுமாரை புகழ்ந்த மேக்ஸ்வெல்
x

Image Courtesy: AFP 

சூர்யகுமார் உச்சபட்ச 'பார்மில்' இருப்பதால் அவரை வாங்கும் அளவிற்கு அணிகளிடம் பணம் இல்லை என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணியின் 'மிஸ்டர் 360 டிகிரி' வீரராக உருவெடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். ஐசிசி-யின் டி20 தரவரிசை பேட்ஸ்மேன்களில் தற்போது முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் சூர்யகுமார் யாதவ் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து சிறப்பாக ஆடி ரன்கள் குவித்து வருகிறார்.

இவரின் அதிரடி ஆட்டத்தால் கடந்த ஒரு ஆண்டுகளாக இந்திய அணி பல போட்டிகளில் வெற்றியை ருசித்து உள்ளது. நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் ஆறு போட்டிகளில் 239 ரன்களை குவித்து அவர் அசத்தி இருந்தார்.

அதை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மூன்றாவது முறையாக (சர்வதேச டி20 கிரிக்கெட்டில்) தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். இந்த நிலையில் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமாரை ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பதை போன்று ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. சூர்யகுமார் யாதவ் உச்சபட்ச பார்மில் இருப்பதால் அவரை வாங்கும் அளவிற்கு பிக்பாஷ் லீக் அணிகளிடம் பணம் இல்லை என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து தொடரில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை பாராட்டிய மேக்ஸ்வெல், வருங்காலத்தில் பிக் பாஷ் லீக்கில் சூர்யகுமார் ஒப்பந்தம் செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த போது, " அவரை வாங்குவதற்கு எங்களிடம் போதுமான பணம் இல்லை. அவரை வாங்குவதற்கான பணத்தை ஈட்ட கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தத்தில் உள்ள ஒவ்வொரு வீரரையும் நாங்கள் நீக்க வேண்டும்" என புன்னகையுடன் தெரிவித்தார்.


Next Story