தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? - டிராவிட் கூறிய பதில்


தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? - டிராவிட் கூறிய பதில்
x

இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இஷான் கிஷன் மனதளவில் சோர்ந்து விட்டதாக கூறி விலகிவிட்டார்.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இஷான் கிஷன் மனதளவில் சோர்ந்து விட்டதாக கூறி விலகிவிட்டார். இதனால் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது கே.எல். ராகுலா அல்லது கே.எஸ். பாரத்தா என்ற கேள்வி நிலவுகிறது.

இந்நிலையில் இத்தொடரில் பேட்டிங்கில் அசத்தக்கூடிய கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு;-

"இஷான் இல்லாத இந்த சூழ்நிலையில் எங்களுக்கு விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய சில வீரர்கள் இருக்கின்றனர். அதில் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு நல்ல தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலும் விக்கெட் கீப்பிங் செய்ததில்லை என்பது தெரியும். 50 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக கீப்பிங் பணியை கவனிக்கிறார். கடந்த 5-6 மாதங்களாக விக்கெட் கீப்பராக நன்றாக செயல்படுகிறார். எங்களை பொறுத்த வரை பேட்டிங் மற்றும் கீப்பிங் ஆகிய இரண்டிலும் அசத்தக்கூடிய அவரை போன்ற ஒருவர் இருப்பது நல்ல வசதியை கொடுக்கிறது" என்றார்.


Next Story