வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்..? சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை


வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்..? சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை
x

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது.

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் ஆட வேண்டும். லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 41-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.

டிவான் கான்வே

டோனி தலைமையிலான சென்னை அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 2 முறை) 10 புள்ளிகள் பெற்றுள்ளது. முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் மீண்டும் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் 203 ரன் இலக்கை நோக்கி ஆடி 170 ரன்னில் அடங்கியது. அந்த ஆட்டத்தில், தொடர்ந்து 4 அரைசதம் விளாசிய தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே, அதிரடியாக ஆடி வரும் ரஹானே ஆகியோர் சோபிக்காமல் போனது பின்னடைவாக அமைந்தது.

மேலும் மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கும் அம்பத்தி ராயுடு தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆடாததும் பாதகமாக இருக்கிறது. பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் துஷர் தேஷ்பாண்டே (14 விக்கெட்) கலக்கி வருகிறார். சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா (11), மொயீன் அலி ( 7) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பேட்டிங்கில் அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.

பஞ்சாப் அணி எப்படி?

ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி 4 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. வெற்றி, தோல்வியை மாறி, மாறி சந்தித்து வரும் அந்த அணி தனது கடந்த லீக் ஆட்டத்தில் லக்னோவுக்கு எதிராக 258 ரன் இலக்கை விரட்டுகையில் 201 ரன்னில் முடங்கி 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அந்த அணியின் பேட்டிங் நிலையற்றதாக இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் அந்த அணியின் அதர்வா டெய்ட் (66 ரன்கள்), சிகந்தர் ராசா (36 ரன்கள்) ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். கேப்டன் ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன் ஆகியோர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடவில்லை. பந்து வீச்சில் ராகுல் சாஹர் தவிர மற்றவர்கள் ரன்களை வாரி வழங்கியது பாதிப்பை ஏற்படுத்தியது.

சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியின் சவாலை சமாளிக்க வேண்டும் என்றால் பஞ்சாப் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். அத்துடன் உள்ளூர் சூழல் சென்னை அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும். வெற்றிப்பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் இரு அணிகளும் மல்லுக்கட்டுவதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் சென்னையும், 12-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன. சென்னைக்கு எதிரான கடைசி 3 ஆட்டங்களில் பஞ்சாப் அணி தொடர்ந்து வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ரஹானே, ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), பதிரானா, துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா.

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), அதர்வா டெய்ட், சிகந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், ஜிதேஷ் ஷர்மா, ஷாருக்கான், ராகுல் சாஹர், ரபடா, அர்ஷ்தீப் சிங்.

மற்றொரு ஆட்டத்தில் மும்பை-ராஜஸ்தான் மோதல்

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு (42-வது) லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். போட்டித் தொடரில் இது ஆயிரமாவது ஆட்டமாகும்.

மும்பை அணியை பொறுத்தமட்டில் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. அந்த அணி 7 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 4 தோல்வி கண்டு இருக்கிறது. தனது முந்தைய 2 ஆட்டங்களில் பஞ்சாப், குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. அதிரடி ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பேட்டிங் நன்றாக அமையாததும், கடைசி கட்ட பந்து வீச்சில் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பதும் அந்த அணியின் காலை வாரும் விஷயமாக இருந்து வருகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தில் இருந்து முழுமையாக மீளாதது அந்த அணிக்கு தலைவலியாக உள்ளது.



சவாலை சமாளிக்குமா?

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. அந்த அணியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பலமாக உள்ளது. பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (304 ரன்கள்), ஜோஸ் பட்லர் (271 ரன்கள்), சஞ்சு சாம்சன், ஹெட்மயர், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெலும், பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஸ்வின், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா ஆகியோரும் அசத்தி வருகிறார்கள். வலுவான ராஜஸ்தான் அணியை அடக்க வேண்டும் என்றால் மும்பை அணி தனது உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் முடியும். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கை ஓங்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 26 ஆட்டங்களில் சந்தித்து இருக்கின்றன. இதில் 14-ல் மும்பையும், 12-ல் ராஜஸ்தானும் வென்றுள்ளன.

இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.


Next Story