அணியின் நலன் கருதி நிச்சயம் அதை செய்வார் - எம்.எஸ். தோனி குறித்து ஆஸி. முன்னாள் கேப்டன் கருத்து


அணியின் நலன் கருதி நிச்சயம் அதை செய்வார் - எம்.எஸ். தோனி குறித்து ஆஸி. முன்னாள் கேப்டன் கருத்து
x

image courtesy: twitter/@ChennaiIPL

ஐ.பி.எல். தொடரில் தோனியின் நிலைப்பாடு குறித்து மைக்கேல் கிளார்க் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 போட்டிகளில் விளையாடி அதில் 2 வெற்றிகள் மற்றும் 1 தோல்வி கண்டுள்ளது. இந்த 3 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்சின் மூத்த வீரர் தோனிக்கு, முதல் இரு ஆட்டங்களில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.

நேற்று முன்தினம் டெல்லிக்கு எதிராக முதல் முறையாக களம் கண்ட அவர் 16 பந்தில் 37 ரன் விளாசி அசத்தினார் 42 வயதிலும் அவரது பேட்டிங் ஜாலம் ரசிகர்களை குதூகலப்படுத்தியது. தற்போது 8-வது வரிசையில் ஆடும் அவர் முன்வரிசையில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

தோனியின் நிலைப்பாடு குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். கிளார்க் கூறுகையில், 'தோனி தற்போது எந்த வரிசையில் இறங்குகிறாரோ அதே வரிசையில்தான் தொடர்ந்து விளையாடுவார் என்று நினைக்கிறேன். முடிந்தவரை அவர் முன்வரிசைக்கு வர வேண்டும் என்பதே தோனி ரசிகர்களின் விருப்பமாகும்.

எங்களை பொறுத்தவரை அவர் தொடக்க ஆட்டக்காரராக ஆட வேண்டும் என்று எப்போதும் சொல்லி வந்துள்ளோம். ஆனால் தற்போதைய நிலையில், அவர் முன்வரிசையில் வந்து ஆடுவார் என்று நினைக்கவில்லை. ஒரு வேளை ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க அவர் முன்கூட்டியே விளையாட வேண்டிய சூழல் உருவானால், அப்போது அணியின் நலன் கருதி நிச்சயம் அதை செய்வார்' என்றார்.


Next Story