மகளிர் கிரிக்கெட்; ஆஸ்திரேலிய அணிக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா...!

image courtesy; @ICC
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 34 ரன்கள் அடித்தார்.
மும்பை,
அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 34 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக சதர்லேண்ட் மற்றும் வேர்ஹாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.






