பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜூலன் கோஸ்வாமி நியமனம்...!


பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜூலன் கோஸ்வாமி நியமனம்...!
x

Image Courtesy: @mipaltan

மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதே போல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிக்கு 'பெண்கள் பிரிமீயர் லீக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான மும்பையை தலைமையிடமாக கொண்ட மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. அந்த அணி நிர்வாகம் தற்போது மும்பை அணியின் பயிற்யாளர் குழுவை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து பெண்கள் அணியின் முன்னாள் வீராங்கனை சார்லட் எட்வர்ட்ஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி அணியின் ஆலோசகர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் தேவிகா பால்ஷிகார் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அந்த அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


Next Story