பெண்கள் பிரீமியர் லீக்; குஜராத்துக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த டெல்லி அணி


பெண்கள் பிரீமியர் லீக்; குஜராத்துக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த டெல்லி அணி
x
தினத்தந்தி 3 March 2024 3:41 PM GMT (Updated: 3 March 2024 3:47 PM GMT)

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.

பெங்களூரு,

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து, மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீராங்கனையாக விளையாடிய லானிங் அரை சதம் (55) கடந்துள்ளார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷெபாலி வர்மா 13 ரன்களில் வெளியேறினார்.

கேப்சி (27), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (7), அன்னாபெல் (20), ஜோனாஸ்ஸென் (11), அருந்ததி (5), ராதா (5), ஷிகா (14) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது. இதனால், குஜராத் அணி வெற்றி பெற 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி இதுவரை 3 லீக் ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 1 தோல்வி கண்டு 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 3 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் அணி அனைத்திலும் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

குஜராத் அணி இன்று நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் உள்ளது. அதேவேளையில் டெல்லி அணி வெற்றிப்பயணத்தில் தொடர்ந்து முன்னேறி செல்லும் முனைப்பில் உள்ளது.


Next Story