'வார்த்தைகளால் இந்த தோல்வியை என்னால் விவரிக்க முடியவில்லை'- தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா வேதனை!


வார்த்தைகளால் இந்த தோல்வியை என்னால் விவரிக்க முடியவில்லை- தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா வேதனை!
x

image courtesy; twitter/ @ICC

தினத்தந்தி 17 Nov 2023 4:20 AM GMT (Updated: 17 Nov 2023 5:05 AM GMT)

உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதன்படி கொல்கத்தா நகரில் நடைபெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 212 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் அடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இதுவரை தகுதி பெற முடியாமல் இருந்த தென்னாப்பிரிக்க அணி மீண்டும் ஒரு முறை அரையிறுதியில் தோல்வியை தழுவி இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா கூறுகையில்;- 'வார்த்தைகளால் இந்த தோல்வியை என்னால் விவரிக்க முடியவில்லை. முதலில் நான் ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இறுதிப்போட்டிக்கு செல்லும் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய ஆட்டத்தில் அவர்கள் மிகச்சிறப்பாக விளையாடியிருந்தனர். அவர்களது செயல்பாடு அருமையாக இருந்ததாலே அவர்களுக்கு வெற்றி கிடைத்தது.

இந்த ஆட்டத்தில் நாங்கள் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சரியான துவக்கத்தை பெறவில்லை. இந்த தொடர் முழுவதுமே நாங்கள் சிறப்பாக விளையாடியிருந்தாலும் ஒரு தரமான அணிக்கு எதிராக விளையாடும்போது இதுபோன்ற சரிவு ஏற்படுவது நடக்கக்கூடிய ஒன்றுதான். குறிப்பாக ஆரம்பத்திலேயே நாங்கள் 4 விக்கெட்டுகளை இழந்ததால் எங்களுக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. இருப்பினும் மில்லர் மற்றும் கிளாஸென் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். கிளாஸென் இறுதிவரை விளையாட முடியாமல் போனது சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.

நிச்சயம் இன்னும் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் எங்களால் வெற்றிக்காக போராடியிருக்க முடியும். இந்த தொடரில் எங்களது அணியின் பலவீரர்கள் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி உள்ளனர். எப்போதுமே நாங்கள் ஒரு போராட்டமான கிரிக்கெட்டை அளித்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி. டிகாக் போன்ற ஒரு வீரர் எங்கள் அணியில் இருந்து ஓய்வு பெறுவது கடினமாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் அவர் தென்னாப்பிரிக்க அணியின் ஜாம்பவானாக ஓய்வு பெறுகிறார்' என கூறியுள்ளார்.


Next Story