கள்ளச்சந்தையில் உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகள்- கொல்கத்தா போலீசார் நோட்டீஸ்


கள்ளச்சந்தையில் உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகள்- கொல்கத்தா போலீசார் நோட்டீஸ்
x

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.

கொல்கத்தா,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் அசைக்க முடியாத ஒரே அணியாக இந்தியா வலம் வருகிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை என்று வரிசையாக போட்டு தாக்கிய இந்தியா முதல் அணியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவின் ஆதிக்கத்துக்கு அணை போட்டு புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடிக்க தென்ஆப்பிரிக்க அணி தீவிரமாக முயலும். வலுவான பேட்டிங், பந்து வீச்சை கொண்ட இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தைக்காண ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனால் இந்த ஆட்டத்தைக்காண ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் கள்ள சந்தையில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கின்றனர். சாதாரண டிக்கெட்டின் விலையை விட 3 மடங்கு அதிகமாக இதில் விற்பனை செய்கின்றனர். இது தொடர்பாக கொல்கத்தா போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதனால் இந்தியா -தென்ஆப்பிரிக்கா விளையாடும் உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பிசிசிஐக்கு கொல்கத்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதில் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்கள், ஆவணங்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story