ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி ஏ.டி.கே.மோகன் பகான் அரைஇறுதிக்கு முன்னேற்றம்


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி ஏ.டி.கே.மோகன் பகான் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x

image courtesy: ATK Mohun Bagan FC twitter

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 2-வது வெளியேற்றுதல் சுற்றில் ஏ.டி.கே.மோகன் பகான் - ஒடிசா அணிகள் மோதின.

கொல்கத்தா,

11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த மும்பை சிட்டி (46 புள்ளி), ஐதராபாத் எப்.சி. (42 புள்ளி) அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறின. அடுத்த 4 இடங்களை பிடித்த ஏ.டி.கே. மோகன் பகான் (34 புள்ளி), பெங்களூரு எப்.சி. (34 புள்ளி), கேரளா பிளாஸ்டர்ஸ் (31 புள்ளி), ஒடிசா எப்.சி. (30 புள்ளி) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றை எட்டின.

இதில் நேற்று நடைபெற்ற முதலாவது வெளியேற்றுதல் சுற்றில் கேரளாவை வீழ்த்தி வெற்றி பெற்ற பெங்களூரு அணி அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்த நிலையில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 2-வது வெளியேற்றுதல் சுற்றில் ஏ.டி.கே.மோகன் பகான் - ஒடிசா அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஏ.டி.கே.மோகன் பகான் அணி சார்பில் ஹியூகோ ஆட்டத்தின் 36-வது நிமிடத்திலும் திமித்ரி ஆட்டத்தின் 58-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஒடிசா அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஏ.டி.கே.மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஏ.டி.கே.மோகன் பகான் அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.


Next Story