ஐ.எஸ்.எல். கால்பந்து: முதலாவது அரைஇறுதியில் மும்பை-பெங்களூரு இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: முதலாவது அரைஇறுதியில் மும்பை-பெங்களூரு இன்று மோதல்
x

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் முதலாவது அரைஇறுதியில் மும்பை-பெங்களூரு இன்று மோதுகின்றன.

மும்பை,

11 அணிகள் பங்கேற்ற 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் சுற்று முடிவில் மும்பை சிட்டி எப்.சி. முதலிடமும், நடப்பு சாம்பியன் ஐதராபாத் எப்.சி. 2-வது இடமும் பிடித்து நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறின. வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு எப்.சி. 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சையும், ஏ.டி.கே.மோகன் பகான் 2-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவையும் தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தன. ஒவ்வொரு அரைஇறுதியும் இரண்டு ஆட்டங்கள் கொண்டதாகும். இதில் அதிக வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

மும்பையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் முதலாவது அரைஇறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை சிட்டி-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை சிட்டி 6 முறையும், பெங்களூரு அணி 5 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன.


ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த சீசனில் இரு அணிகளும் 2 தடவை லீக் ஆட்டங்களில் மோதியதில் தலா ஒரு வெற்றி பெற்றதும் இதில் அடங்கும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story