1,400 வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில தடகளம் சென்னையில் இன்று தொடங்குகிறது


1,400 வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில தடகளம் சென்னையில் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 23 Jun 2017 8:49 PM GMT (Updated: 23 Jun 2017 8:49 PM GMT)

1,400 வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில சீனியர் தடகள போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

சென்னை,

1,400 வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில சீனியர் தடகள போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

மாநில சீனியர் தடகளம்

சென்னை மாவட்ட தடகள சங்கம் சார்பில், 90–வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதில் ஆண்கள் பிரிவில் 22 பந்தயங்களும், பெண்கள் பிரிவில் 22 பந்தயங்களும் நடத்தப்படுகின்றன. இந்த போட்டியில் மித்ரா வருண் (வட்டு எறிதல், குண்டு எறிதல்), லோகநாயகி (400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம்), விஜயகுமார் (100 மீட்டர் ஓட்டம்), காயத்ரி (100 மீட்டர் தடை ஓட்டம்), மோகன் குமார் (200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டம்), பிரியா (800 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டம்), அமல்ராஜ் (டிரிபிள்ஜம்ப்) உள்ளிட்ட 1,400 வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

தமிழக அணிகள் தேர்வு

தினசரி அதிகாலையில் 5 மணிக்கும், மாலையில் 4 மணிக்கும் பந்தயங்கள் தொடங்கி மின்னொளியில் நடைபெறும். இந்த போட்டியின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் குண்டூரில் ஜூலை 15–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை நடைபெறும் மாநிலங்களுக்கு இடையிலான 57–வது தேசிய சீனியர் தடகள போட்டி மற்றும் சென்னையில் செப்டம்பர் 25–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடைபெறும் 57–வது தேசிய ஓபன் தடகள போட்டி ஆகியவற்றுக்கான தமிழக தடகள அணி தேர்வு செய்யப்படும்.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது பொருளாளர் சி.லதா உடனிருந்தார்.


Next Story