அகில இந்திய கைப்பந்து போட்டி: கேரளா போலீஸ் அணி ‘சாம்பியன்’


அகில இந்திய கைப்பந்து போட்டி: கேரளா போலீஸ் அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 31 March 2018 9:00 PM GMT (Updated: 31 March 2018 8:35 PM GMT)

நெல்லை நண்பர்கள் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 45–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

நெல்லை நண்பர்கள் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 45–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. ‘தினத்தந்தி’ மற்றும் எஸ்.என்.ஜெ., ஒய்.எம்.சி.ஏ.மெட்ராஸ் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் 5–வது நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ்நாடு யூத்–கேரளா போலீஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கேரளா போலீஸ் அணி 17–25, 25–16, 25–13, 25–20 என்ற செட் கணக்கில் தமிழ்நாடு யூத் அணியை வீழ்த்தி ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியதுடன், முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு எஸ்.என்.ஜெ. நிர்வாக இயக்குனர் எஸ்.என்.ஜெயமுருகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம் முன்னிலை வகித்தார். போலீஸ் ஏ.டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்ற கேரளா போலீஸ் அணிக்கு, எஸ்.என்.ஜெ. கோப்பையை வழங்கினார். அத்துடன் அந்த அணிக்கு ரூ.75 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 2–வது இடம் பெற்ற தமிழ்நாடு யூத் அணிக்கு ஒய்.எம்.சி.ஏ.மெட்ராஸ் கோப்பையும், ரூ.60 ஆயிரமும், 3–வது இடம் பெற்ற தென் மத்திய ரெயில்வே அணிக்கு இ2இ கோப்பையுடன் ரூ.40 ஆயிரமும், 4–வது இடம் பெற்ற தெற்கு ரெயில்வே அணிக்கு டாக்டர் பி.டி.போஸ் நினைவு கோப்பையுடன் ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டன. சிறந்த வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்ட அஞ்சுமோஸ் (கேரளா போலீஸ்), ஷாலினி (தமிழ்நாடு யூத்), தேவிகா (தென் மத்திய ரெயில்வே), பூர்ணிமா (தெற்கு ரெயில்வே), சரண்யா (தமிழ்நாடு யூத்) ஆகியோரும் தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு அளிக்கப்பட்டது.

விழாவில் போஸ் பப்ளிக் பள்ளி தாளாளர் பீனா போஸ், இ2இ நிறுவன சேர்மன் அஞ்சலி அய்யர், ஸ்ரீ முகாம்பிகா நிறுவன நிர்வாக இயக்குனர் செல்வகணேஷ், பியல் சிட்டி பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.ரமேஷ்குமார், ஒய்.எம்.சி.ஏ.மெட்ராஸ் சேர்மன் ரவிக்குமார் டேவிட், போட்டி அமைப்பு குழு செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், துணைசேர்மன் பி.பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story