உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம்:‘கேள்விக்கு விடை கிடைத்து விட்டது’ - சிந்து பெருமிதம்


உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம்:‘கேள்விக்கு விடை கிடைத்து விட்டது’ - சிந்து பெருமிதம்
x
தினத்தந்தி 16 Dec 2018 11:00 PM GMT (Updated: 16 Dec 2018 9:51 PM GMT)

சீனாவில் நடந்த உலக டூர் பேட்மிண்டன் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பட்டம் வென்று புதிய சரித்திரம் படைத்தார்.

குவாங்சோவ்,

டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற உலக டூர் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியனும், 5-ம் நிலை வீராங்கனையுமான நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) எதிர்கொண்டார்.

இரு முன்னணி நட்சத்திரங்கள் மல்லுகட்டியதால் களத்தில் அனல் பறந்தது. முதல் செட்டில் சிந்து 7-3, 14-6 என்று முன்னிலை பெற்றார். அதன் பிறகு சரிவில் இருந்து மீண்ட ஒகுஹரா 17-17 என்று சமநிலைக்கு கொண்டு வந்தாலும், சூப்பரான சில ஷாட்டுகள் அடித்து முதல் செட்டை சிந்து வசப்படுத்தினார்.

2-வது செட்டிலும் சிந்து முதல் 3 புள்ளி முன்னிலையுடன் அமர்க்களமாக ஆரம்பித்தார். இருவரும் நீயா-நானா? என்று மட்டையை சுழட்டினர். ஒரு கேமில் இடைவிடாது மொத்தம் 48 ஷாட்டுகளை விளாசி, ரசிகர்களை பரவசப்படுத்தினர். ஆனால் பந்தை வலை மீது அடிப்பது, வெளியே அடிப்பது என்று ஒகுஹரா சற்று அதிகமாக தவறுகள் இழைத்ததால், சிந்துவுக்கு அது சாதகமாக மாறியது. இறுதியில் லாவகமான ஒரு ஷாட் மூலம் ஆட்டத்தை தித்திப்பாக முடித்து வைத்தார்.

62 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-19, 21-17 என்ற நேர் செட்டில் ஒகுஹராவை சாய்த்து சாம்பியன் பட்டத்திற்குரிய தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கி புதிய வரலாறு படைத்தார். கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். முந்தைய காலங்களில், சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் என்ற பெயரில் நடந்த இந்த போட்டி தற்போது உலக டூர் இறுதி சுற்று என்ற பெயரில் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் 2016-ம் ஆண்டு அரைஇறுதியிலும், 2017-ம் ஆண்டு இறுதிஆட்டத்திலும் மண்ணை கவ்விய சிந்து இந்த முறை தடையை வெற்றிகரமாக கடந்திருக்கிறார். மற்ற இந்தியர்களை எடுத்துக் கொண்டால் சாய்னா நேவால் 2011-ம் ஆண்டும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா- திஜூ ஜோடி 2009-ம் ஆண்டும் இறுதி ஆட்டங்களில் தோற்று இருந்தனர்.

2018-ம் ஆண்டில் சிந்து ருசித்த முதல் பட்டம் இதுவாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சிந்து ஹாங்காங் ஓபன், உலக டூர் இறுதி சுற்று, இந்திய ஓபன், காமன்வெல்த் விளையாட்டு, தாய்லாந்து ஓபன், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு போட்டி ஆகியவற்றில் வரிசையாக இறுதிப்போட்டிகளில் தோல்வி அடைந்து, ஒவ்வொரு முறையும் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாகி இருந்தது. இறுதி போட்டி என்றாலே சிந்து மனரீதியாக தடுமாறுவதுடன் பதற்றத்தில் கோட்டை விட்டு விடுகிறார் என்று விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த பட்டம் அவருக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

வாகை சூடிய ஐதராபாத்தை சேர்ந்த 23 வயதான சிந்துவுக்கு 12 ஆயிரம் தரவரிசை புள்ளிகளுடன் ரூ.86 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த ஒகுஹரா ரூ.43 லட்சத்தை பரிசாக பெற்றார்.

‘கேள்விக்கு விடை கிடைத்து விட்டது’ - சிந்து பெருமிதம்


மொத்தத்தில் சிந்து கைப்பற்றிய 14-வது சர்வதேச பட்டம் இதுவாகும். பின்னர் அவர் கூறுகையில், ‘அழகான வெற்றியுடன் இந்த ஆண்டை நிறைவு செய்திருப்பது உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன். மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. இந்த ஆண்டின் எனது முதல் பட்டம் இது. அதுவும் தொடர்ச்சியான இறுதிப்போட்டி தோல்விகளுக்கு பிறகு கிடைத்திருப்பதால் இந்த வெற்றி மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

இறுதிப்போட்டிகளில் ஏன் எப்போதும் தோற்று கொண்டு இருக்கிறீர்கள் என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார்கள். இனி அந்த கேள்வியை என்னை நோக்கி தொடுக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் இப்போது நான் தங்கப்பதக்கம் வென்று விட்டேன் என்று பெருமையோடு சொல்ல முடியும். ஒரு வகையில் மக்கள் அந்த மாதிரி என்னிடம் கேட்டது நல்லதாகவே பட்டது. அதனால் தான் நானும் எனக்குள் இறுதிப்போட்டியில் தோற்பது ஏன் என்று கேட்க வேண்டி இருந்தது. இவற்றுக்கு ஒரு வழியாக இப்போது விடை கிடைத்து விட்டது.

லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றேன். அதைத் தொடர்ந்து அரைஇறுதி, இறுதிப்போட்டியிலும் வெற்றி கண்டேன். அந்த வகையில் இந்த தொடர் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் நேர் செட்டில் வெற்றி பெற்றாலும் ஒவ்வொரு புள்ளியையும் எடுக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது. அடுத்து இந்தியாவில் நடக்கும் பிரிமீயர் பேட்மிண்டன் லீக்கில் விளையாட உள்ளேன்’ என்றார்.




Next Story