ஆசிய பளுதூக்குதல் போட்டி: மயிரிழையில் பதக்கத்தை நழுவவிட்டார், மீராபாய் சானு


ஆசிய பளுதூக்குதல் போட்டி: மயிரிழையில் பதக்கத்தை நழுவவிட்டார், மீராபாய் சானு
x
தினத்தந்தி 21 April 2019 10:30 PM GMT (Updated: 21 April 2019 8:19 PM GMT)

ஆசிய பளுதூக்குதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு மயிரிழையில் வெண்கலப்பதக்கத்தை நழுவ விட்டார்.

நிங்போ, 

ஆசிய பளுதூக்குதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு மயிரிழையில் வெண்கலப்பதக்கத்தை நழுவ விட்டார்.

மீராபாய் சானு

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் சீனாவின் ஹோ ஸிஹூய் தங்கப்பதக்கமும் (208 கிலோ), தென்கொரியாவின் ரி சாங்–கம் (200 கிலோ) வெள்ளிப்பதக்கமும் வென்றனர். இதே பந்தயத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடியெடுத்து வைத்த முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் மீராபாய் சானு மயிரிழையில் பதக்கத்தை நழுவ விட்டார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 86 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 113 கிலோ என்று மொத்தமாக 199 கிலோ எடையை தூக்கினார். சீனாவின் ஜாங் ரோங்கும் இதே போல் 199 கிலோ (ஸ்னாட்ச் 88 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க்கில் 111 கிலோ) தூக்கி சமநிலை வகித்தார். புதியவிதிமுறைப்படி இவ்வாறு இரு வீராங்கனைகள் சமநிலையில் இருக்கும் போது கிளீன்அண்ட் ஜெர்க் பிரிவில் யார் குறைவாக எடை தூக்குகிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அந்த வகையில் சீனாவின் ஜாங் ரோங் வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மீராபாய் சானு 4–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஆனாலும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் தனிப்பட்ட முறையில் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தது மீராபாய் சானுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது. இந்த பிரிவில் அவர் 113 கிலோ தூக்கினார். முன்பு 111 கிலோ வரை எடை தூக்கியதே சிறந்ததாக இருந்தது. மணிப்பூரைச் சேர்ந்த 24 வயதான மீராபாய் ஒரு முறை 115 கிலோ எடையை தூக்குவதற்கு முயற்சித்தார். அது வெற்றிகரமாக அமைந்திருந்தால் அவருக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்திருக்கும்.

15 சாதனை படைத்த ஜெரிமி

ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவில் வீரர்கள், ஏ, பி என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். இதில் பி பிரிவில் அங்கம் வகித்த இளையோர் ஒலிம்பிக் சாம்பியனான இந்திய வீரர் ஜெரிமி லால்ரின்னுங்கா மொத்தம் 297 கிலோ (ஸ்னாட்ச் 134 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் 163 கிலோ) தூக்கி பிரமாதப்படுத்தினார். ஜெரிமி பி பிரிவில் 2–வது இடத்தை பிடித்தார். பாகிஸ்தானின் தல்ஹா தலிப் 304 கிலோவுடன் முதலிடம் பெற்றார். இன்று ‘ஏ’ பிரிவில் உள்ள வீரர்களுக்கு போட்டி நடக்கும். அதன் பிறகே பதக்கம் வெல்வது யார்? என்பது தெரிய வரும்.

மிசோரத்தை சேர்ந்த 16 வயதான ஜெரிமி தனது அசத்தலான செயல்பாட்டின் மூலம் ஜூனியர் மட்டத்தில் 15 சாதனைகளை நிகழ்த்தினார். அதாவது உலக இளையோர், ஆசிய இளையோர், தேசிய இளையோர், தேசிய ஜூனியர், தேசிய சீனியர் ஆகிய பிரிவில் தலா 3 சாதனைகள் வீதம் படைத்தார். இதில் குறிப்பிட்டு ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் ஸ்னாட்ச் பிரிவில் இளையோர் உலக சாதனை 131 கிலோ தூக்கியது ஆகும். அதுவும் அவரது சாதனை தான். அதை தற்போது 134 கிலோவாக மாற்றி அமைத்துள்ளார்.

முதல் பதக்கம்

முன்னதாக பெண்களுக்கான 45 கிலோ பிரிவில் ஜிலி தலபெஹெரா 2–வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தி (மொத்தம் 167 கிலோ) இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கி வைத்தார். ஜிலி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். ஆனால் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் 45 கிலோ பிரிவு இடம் பெறவில்லை. இதனால் இந்த பிரிவு பந்தயம் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை.


Next Story