உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: தவறை ஒப்புக் கொண்ட நடுவர் தர்மசேனா


உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: தவறை ஒப்புக் கொண்ட நடுவர் தர்மசேனா
x
தினத்தந்தி 21 July 2019 11:36 PM GMT (Updated: 21 July 2019 11:36 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடந்தது தவறு என நடுவர் தர்மசேனா ஒப்புக் கொண்டார்.


வங்காளதேச பிரிமீயர் லீக்கில் மோர்கன்

இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், வங்காளதேச பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் டாக்கா டைனமிட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். வங்காளதேச பிரிமீயர் லீக்கில் மோர்கன் ஆட இருப்பது இதுவே முதல் முறையாகும்.

சரத்கமல் அதிர்ச்சி தோல்வி

21-வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கட்டாக்கில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சத்யன்-அர்ச்சனா கமாத் ஜோடி 11-1, 11-7, 11-4 என்ற நேர் செட் கணக்கில் சிங்கப்பூரின் பெங் யு கோயன்-கோய் ரு ஸியான் இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. அதே சமயம் இந்திய முன்னணி வீரரான தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் ஒற்றையர் கால்இறுதியில் 11-7, 11-9, 8-11, 11-4 9-11, 7-11, 10-12 என்ற செட் கணக்கில் 17 வயதான பாங் யு என் கோயனிடம் (சிங்கப்பூர்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

தவறை ஒப்புக் கொண்ட நடுவர் தர்மசேனா

உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கடைசி கட்டத்தில் 2-வது ரன்னுக்கு ஓடிய போது, பீல்டர் எறிந்த பந்து அவரது பேட்டில் பட்டு பவுண்டரிக்கு ஓடியது. இதனால் நடுவர் தர்மசேனா (இலங்கை) 6 ரன் வழங்கினார். இதையடுத்து ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவரை சென்று ஒரு வழியாக இங்கிலாந்து உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் 2-வது ரன்னை பூர்த்தி செய்யாத நிலையில் பந்து பேட்டில் பட்டு பவுண்டரிக்கு ஓடியதால் அந்த ஓவர் த்ரோவுக்கு 5 ரன் தான் வழங்கியிருக்க வேண்டும், 6 ரன் வழங்கியது நடுவரின் தவறு என்று விமர்சனம் கிளம்பியது. இந்த நிலையில் நடுவர் தர்மசேனா தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். டி.வி. ரீப்ளேயை பார்த்த போது 5 ரன் தான் கொடுத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்ததாகவும், இருப்பினும் சக நடுவருடன் ஆலோசித்த பிறகே 6 ரன் வழங்கியதாகவும், இதனால் வருத்தம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story