ஆசிய விளையாட்டு: படகு போட்டி, துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 பதக்கம்


ஆசிய விளையாட்டு: படகு போட்டி, துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 பதக்கம்
x

image courtesy: twitter image via ANI

ஆசிய விளையாட்டில் 2-வது நாளான நேற்று இந்தியா 3 வெள்ளிப்பதக்கமும், 2 வெண்கலமும் வென்றது.

ஹாங்சோவ்,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

2-வது நாளான நேற்று இந்தியா 5 பதக்கங்களை அறுவடை செய்தது. இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகள் 'சுட்டு' தந்தனர். பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்சே ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,886 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. 1896.5 புள்ளிகளுடன் சீனா முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவிலும் அரியானாவைச் சேர்ந்த 19 வயதான ரமிதா பதக்கமேடையில் ஏறினார். அவர் 230.1 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை கழுத்தில் ஏந்தினார். இவர் சென்னையில் நேகா சவானிடம் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மெகுலி கோஷ் 208.3 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு சரிந்தார். சீன வீராங்கனை யுதிங் ஹூவாங் 252.7 புள்ளிகளுடன் ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

துடுப்பு படகு போட்டியில் 'டபுள்ஸ் ஸ்கல்' பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜாட் - அரவிந்த் சிங் ஜோடி 2 ஆயிரம் மீட்டர் தூரத்தை 6 நிமிடம் 28.18 வினாடிகளில் எட்டிப்பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தியது. சீனாவின் ஜூன்ஜி பேன்-மேன் சூன் இணை முதலிடத்தை (6 நிமிடம் 23.16 வினாடி) பிடித்தது. இதே போல் துடுப்பு படகு ஜோடி பிரிவில் இந்தியாவின் பாபு லால் யாதவ் - லேக் ராம் இணை (6 நிமிடம் 50.41 வினாடி) வெண்கலப்பதக்கத்தை பெற்றது.

8 பேர் கொண்ட அணியினர் துடுப்பு படகை செலுத்தும் பந்தயத்தில் இந்தியா 2 ஆயிரம் மீட்டர் இலக்கை 5 நிமிடம் 43.01 வினாடிகளில் 2-வதாக கடந்து வெள்ளிப்பதக்கத்தை சுவைத்தது. நீரஜ், நரேஷ், ஜஸ்விந்தர் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய குழுவை விட 2.84 வினாடி முந்திய சீனாவுக்கு தங்கப்பதக்கம் கிட்டியது.

ஆண்கள் பிரிவு கைப்பந்தில் லீக் சுற்றில் கலக்கிய இந்தியாவின் 'வீறுநடை' கால்இறுதியுடன் முடிவுக்கு வந்தது. 8 முறை ஆசிய சாம்பியனான ஜப்பான் 25-16, 25-18, 25-17 என்ற நேர் செட் கணக்கில் இந்திய அணியை தோற்கடித்தது.

ஆண்கள் ஆக்கியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இன்றி களம் புகுந்த இந்தியா 16-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை (ஏ பிரிவு) ஊதித்தள்ளியது. லலித் குமார் உபாத்யாய் 4 கோலும், மன்தீப்சிங், வருண்குமார் தலா 3 கோலும் அடித்தனர். இந்திய அணி அடுத்து சிங்கப்பூரை நாளை சந்திக்கிறது.

டென்னிசில் தொடக்க ஆட்டங்களில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் லிங் ஹோ டின் மார்கோவை (மக்காவ்) பந்தாடினார். இரட்டையர் பிரிவில் சகெத் மைனெனி- ராம்குமார் கூட்டணி 6-2, 6-3 என்ற நேர் செட்டில் நேபாளத்தின் பிரதிப் கட்கா- அபிஷேக் பாஸ்டோலாவை போட்டுத் தாக்கினர்.

டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியா 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. இதில் முதல் 4 ஆட்டங்கள் முடிவில் 2-2 என்று சமநிலையில் இருந்த போது, கடைசி ஒற்றையர் ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் சரிவில் இருந்து மீண்டு வந்து 5-11, 7-11, 11-9, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் கென்ஜிகுலோவை சாய்த்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி அடுத்த சில மணி நேரங்களில் கரைந்து போனது. இதைத் தொடர்ந்து நடந்த கால்இறுதியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் தோற்று பதக்க வாய்ப்பை கோட்டை விட்டது. இந்திய அணியில் ஹர்மீத் தேசாய், சத்யன், சரத்கமல் மூன்று பேரும் தோல்வி அடைந்தனர். இதன் பெண்கள் பிரிவில் இந்தியா 2-3 என்ற கணக்கில் தாய்லாந்திடம் தோற்று வெளியேறியது.

கால்பந்தில் பெண்கள் பிரிவில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் (பி பிரிவு) தாய்லாந்திடம் பணிந்தது. ஏற்கனவே சீனதைபேயிடம் தோற்று இருந்த இந்தியா கால்இறுதிவாய்ப்பை இழந்து நடையை கட்டியது. ஆண்கள் பிரிவில் இந்தியா- மியான்மர் இடையிலான ஆட்டம் 1-1 கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது. தனது பிரிவில் 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தை உறுதி செய்த இந்திய அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. நாக்-அவுட் சுற்றில் இந்திய அணி சவுதிஅரேபியாவுடன் மோத இருக்கிறது.

பெண்கள் குத்துச்சண்டையில் 50 கிலோ உடல் எடைப்பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் 2 முறை ஆசிய சாம்பியனான நுயேன் தி டேமை (வியட்நாம்) எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார். 54 கிலோ பிரிவில் பிரீத்தி பவாரும் வெற்றி பெற்றார்.

செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் விதித் குஜராத்தி 2-வது சுற்றில் கஜகஸ்தானின் காஸிபெக் நோஜர்பெக்கிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். பெண்கள் பிரிவில் கோனெரு ஹம்பி, ஹரிகா தங்களது முதல் இரு ரவுண்டில் வெற்றி கண்டனர்.

இந்த ஆசிய விளையாட்டின் முதல் தங்கப்பதக்கத்தை துடுப்புபடகு பந்தயத்தில் வென்ற சீனா துடுப்பு படகு, துப்பாக்கி சுடுதல், வுசூ, நீச்சலில் பதக்க வேட்டை நடத்தியது. 2-வது நாள் முடிவில் சீனா 20 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என்று மொத்தம் 30 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. தென்கொரியா 5 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 14 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்துடன் 7-வது இடத்தில் இருக்கிறது.


Next Story