ஆசிய விளையாட்டு: வாலிபால் முதல் சுற்றில் கம்போடியாவை இன்று எதிர்கொள்கிறது இந்தியா


ஆசிய விளையாட்டு: வாலிபால் முதல் சுற்றில் கம்போடியாவை இன்று எதிர்கொள்கிறது இந்தியா
x

சி பிரிவில் இந்திய அணியுடன் கம்போடியா, தென் கொரியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகின்றன. ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் ஆரம்பமாகின்றன.

இதில் ஆடவர்களுக்கான வாலிபால் போட்டிகள் இன்று தொடங்கி அக்டோபர் 7ம் தேதி வரை நான்கு மைதானங்களில் நடைபெறுகின்றன. மொத்தம் 19 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இந்திய அணி சி பிரிவில் உள்ளது. இந்த பிரிவில் கம்போடியா, தென் கொரியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் கம்போடியாவுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்க உள்ளது. நாளை தென் கொரிய அணியுடன் இந்தியா விளையாடுகிறது.

இந்திய ஆடவர் வாலிபால் அணி இதுவரை ஆசிய போட்டிகளில் ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story