ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிப்பு


ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிப்பு
x

கோப்புப்படம்

கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவில் வருகிற செப்டம்பர் 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியை நடத்துவது குறித்து போட்டி அமைப்பாளர்கள் உள்பட அனைத்து தரப்பினருடனும் கலந்து ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் அடுத்த ஆண்டு (2023) செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடைபெறும் என்று ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மற்ற பெரிய போட்டிகள் இல்லாத சமயத்தில் ஆசிய விளையாட்டு போட்டியை நடத்துவது குறித்து ஆராய அமைத்த குழு அளித்த சிபாரிசின் அடிப்படையில் போட்டி நடைபெறும் தேதி முடிவு செய்யப்பட்டதாக ஆசிய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் சுமார் 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story