ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரருக்கு வெண்கலப்பதக்கம்

Image Courtesy : SAI Media Twitter
இந்தியாவின் அபிஷேக் பால் வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார்
பாங்காக்,
24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று தொடங்கியது. வருகிற 16-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் இந்தியா பதக்க கணக்கை தொடங்கியுள்ளது. ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அபிஷேக் பால் 29 நிமிடம் 33.26 வினாடிகளில் இலக்கை கடந்து 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். ஜப்பானின் ரென் தஜவா (29 நிமிடம் 18.44 வினாடி) தங்கப்பதக்கமும், கஜகஸ்தானின் கோச் கிமுடாய் ஷட்ராக் வெள்ளிப்பதக்கமும் (29 நிமிடம் 31.63 வினாடி) பெற்றனர்.
பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னுராணி ஏமாற்றம் அளித்தார். மயிரிழையில் பதக்கத்தை நழுவ விட்ட அவர் 59.10 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 4-வது இடத்தை பிடித்தார். 400 மீட்டர் ஓட்டத்தில் ராஜேஷ் ரமேஷ், முகமது அஜ்மல் மற்றும் வீராங்கனை ஐஸ்வர்யா மிஸ்ரா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்..






