மல்யுத்த வீரர் சாகர் தங்கார் கொலை வழக்கு: சுஷில் குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
சுஷில் குமார் மற்றும் 17 பேர் மீது டெல்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
2012 ஆம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர் இந்தியாவின் சுஷில் குமார். கடந்த ஆண்டு மே மாதம் சொத்து தகராறு காரணமாக, இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, முன்னாள் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகர் தங்கர் மற்றும் அவரது நண்பர்களை, சத்ரசல் மைதானத்தில் வைத்து தாக்கினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சாகர் தங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து தப்பிச்சென்ற சுஷில் குமார் தொடர்ந்து தலைமறைவாகி வந்த நிலையில், அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சுஷில் குமார் மற்றும் 17 பேர் மீது டெல்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, கலவரம், சட்டவிரோத வசூல் மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.