சீன ஓபன் பேட்மிண்டன்: இரட்டையர் பிரிவிலும் தோல்வி.. இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது


சீன ஓபன் பேட்மிண்டன்: இரட்டையர் பிரிவிலும் தோல்வி.. இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது
x

ஆசிய விளையாட்டுப் போட்டி நெருங்கி வரும் நிலையில், சீன ஓபனில் இந்தியா தோல்வியடைந்தது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் ஷோகிபுல் பிக்ரி- மவுலானா பாகாஸ் ஜோடியை எதிர்கொண்டது. இரண்டாம் தரநிலையில் உள்ள இந்திய ஜோடி, 17-21, 21-11, 17-21 என்ற செட்கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுவிஸ் ஓபன், கொரிய ஓபன் மற்றும் இந்தோனேசியா ஓபன் ஆகிய சர்வதேச போட்டிகளில் சாத்விக்-சிராஜ் ஜோடி வெற்றி பெற்றது. ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டி நெருங்கி வரும் நிலையில், சீன ஓபனில் இந்தியா தோல்வியடைந்தது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிக்கி ரெட்டி- ரோகன் கபூர் ஜோடி, மலேசியாவின் சென் டாங் ஜி- டோ ஈ வெய் ஜோடியிடம் 15-21, 16-21 என்ற செட்கணக்கில் தோல்வியை தழுவியது.

முன்னதாக நடைபெற்ற மற்ற ஆட்டங்களிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதன்மூலம் சீன ஒபன் தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்துள்ளது.


Next Story