நீதி பெற உதவுவேன்; டெல்லி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் பி.டி. உஷா பங்கேற்பு


நீதி பெற உதவுவேன்; டெல்லி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் பி.டி. உஷா பங்கேற்பு
x
தினத்தந்தி 3 May 2023 9:51 AM GMT (Updated: 3 May 2023 9:53 AM GMT)

டெல்லி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் பங்கேற்ற பி.டி. உஷா, நான் உங்களுடன் இருக்கிறேன் என்றும் நீங்கள் நீதி பெற நான் உதவுவேன் என்றும் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஒலிம்பிக், காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு, பதக்கங்களை வென்று பெருமை சேர்த்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சமீப காலங்களாக வீதிக்கு வந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழல் காணப்படுகிறது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 12 ஆண்டுகளாக அந்த பதவியில் உள்ள பிரிஜ் பூஷண், பா.ஜ.க. எம்.பி.யாகவும் இருந்து வருகிறார்.

இதுதவிர, கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தியும் 3 மாதங்களுக்கு பின் டெல்லி, ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி தொடங்கி மீண்டும் நடந்து வருகிறது.

இதுபற்றி டெல்லி போலீசார் சமீபத்தில் கூறும்போது, மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம். ஒரு சிறுமி உள்பட மொத்தம் 7 வீரர்கள், பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக புகார் அளித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை போலீசார் விரைவில் பதிவு செய்வார்கள்.

பிரிஜ் பூஷண் சரண் சிங், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் கூட மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு உள்ளார் என குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளின் வழக்கறிஞர் நரேந்திர ஹூடா கூறும்போது, ஐ.பி.சி.யின் பிரிவு 354, 354 (ஏ), 354 (டி) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் ஒரு எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். மற்றொரு எப்.ஐ.ஆர்.ரின் நகல் எங்களுக்கு வழங்கப்படவில்லை (அது பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் மட்டுமே வழங்கப்படும்) என்று கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் 2 எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசியல் கட்சியினரும் சந்தித்து வருகின்றனர். இதன்படி, கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பொது செயலாளரான பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார். இதேபோன்று, டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் அதில் பங்கேற்று பேசினார்.

டெல்லியில் 11-வது நாளாக தொடர்ந்து வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்தில் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா இன்று பங்கேற்றார். இதுபற்றி மல்யுத்த வீரரான பஜ்ரங் பூனியா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, அவர் (பி.டி. உஷா) எங்களிடம் பேசும்போது, உங்களுடன் நான் இருக்கிறேன். நீங்கள் நீதி பெற நான் உதவுவேன் என கூறினார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் சிறையில் அடைக்கப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று பூனியா கூறியுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா கடந்த ஏப்ரல் 27-ந்தேதி செய்தியாளர்களிடம் பேசும்போது, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெருக்களில் போராடுவது என்பது ஒழுங்கீனம். இந்தியாவின் மதிப்பை அது சீர்குலைக்கிறது என்று இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

இதுபற்றி, சாக்ஷி மாலிக் கூறும்போது, பி.டி. உஷாவை நான் மதிக்கிறேன். அவர் எங்களுக்கு உத்வேகம் ஏற்படுத்தி இருக்கிறார். ஆனால், நான் கேட்க விரும்புவது, மேடம் மல்யுத்த வீராங்கனைகள் முன்னே வந்து இருக்கிறோம். துன்புறுத்தல் விவகாரம் பற்றி எழுப்பி இருக்கிறோம். நாங்கள் போராட கூட கூடாதா...? என்று கேள்வி எழுப்பினார்.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு குழுவில் நாங்கள் எங்களுடைய வாக்குமூலங்களை அளித்து இருக்கிறோம். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு குழு உறுப்பினர்களும் அதனை கேட்டு கொண்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.


Next Story