அங்கீகாரம் பெற்ற சங்கம் வழங்கும் சான்றிதழுக்கே விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு - எஸ்.டி.ஏ.டி. தகவல்


அங்கீகாரம் பெற்ற சங்கம் வழங்கும் சான்றிதழுக்கே விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு - எஸ்.டி.ஏ.டி. தகவல்
x
தினத்தந்தி 19 Sep 2023 10:46 PM GMT (Updated: 20 Sep 2023 1:09 AM GMT)

விதிமுறைகளுக்கு புறம்பாக சான்றிதழ்கள் வழங்கும் விளையாட்டு சங்கங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.டி.ஏ.டி. எச்சரித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற விளையாட்டு சங்கம் வழங்கும் சான்றிதழுக்கே விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று எஸ்.டி.ஏ.டி. அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வரையறுக்கப்பட்ட ஆவணங்களை முழுமையாக சமர்ப்பிக்கும் மாநில விளையாட்டு சங்கங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களுக்கு தமிழ்நாட்டில், மாநில, தேசிய போட்டிகள் நடத்திடவும், தேசிய போட்டிகளில் தமிழக அணிகள் பங்கேற்பதற்கான மானியமும் வழங்கப்படுகிறது. மேலும், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல், மருத்துவம் மற்றும் பிற தொழில் முறை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மாநில சங்கங்கள் வழங்கும் விளையாட்டு போட்டிக்கான சான்றிதழ்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

அதே சமயம் பல்வேறு விளையாட்டு சங்கங்கள் மற்றும் இதன் தொடர்புடைய தேசிய கூட்டமைப்புகள் போட்டி நடத்திடும் அமைப்புகளாக மட்டுமே செயல்படுகின்றன. மேலும் இதுபோன்ற விளையாட்டு கூட்டமைப்புகள் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அங்கீகாரம் பெறாமல் செயல்படுகின்றன. இந்த போலிச் சங்கங்கள் விளையாட்டு போட்டிக்கான சான்றிதழ்களை வழங்கி வீரர்களை தவறாக வழி நடத்துகின்றன.

இதனால் பொறியியல் மற்றும் பிற தொழில்முறை படிப்புகளில் சேர்க்கை மற்றும் 3 சதவீதம் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் போலியான மற்றும் அங்கீகாரம் பெறாத விளையாட்டு சங்கங்கள் வழங்கும் சான்றிதழ்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்காக கோரிக்கைகள் பெறப்படுகின்றன. இதன் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதுடன், மிகுந்த பாதிப்பிற்கும் உள்ளாக நேரிடுகிறது.

போலியான மற்றும் அங்கீகாரம் பெறாத விளையாட்டு சங்கங்கள் சார்பில் வழங்கப்பட்ட முறையற்ற சான்றிதழ்களுக்கு மதிப்பெண் கிடைக்காமல் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கின்றனர். இதனால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அவப்பெயருக்கு உள்ளாக நேரிடுகிறது. வீராங்கனை நித்யா, சென்னை ஐகோர்ட்டில் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவில், மாநில விளையாட்டு சங்கங்களை முறைப்படுத்திட பல்வேறு வழிகாட்டுதல்கள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு விளையாட்டுச் சங்கங்களும், அமைப்பும் மாநில அரசிடம் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஐகோர்ட்டு மாநில விளையாட்டு சங்கங்களை முறைப்படுத்திட வழங்கிய பல்வேறு வழிகாட்டுதல்களை கொண்டு தமிழ்நாடு விளையாட்டுச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே விளையாட்டு வீரர்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், ஐகோர்ட்டு வழங்கிய உத்தரவின்படியும், அனைத்து விளையாட்டு சங்கங்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற மாநில விளையாட்டு சங்கங்கள் மற்றும் தொடர்புடைய அகில இந்திய சம்மேளனம் வழங்கிடும் சான்றிதழ்கள் மட்டுமே பொறியியல், பிற தொழில்முறை படிப்புகளில் 3 சதவீத விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு மற்றும் உயரிய ஊக்க தொகை வழங்கிட பரிசீலிக்கப்படும்.

வீரர், வீராங்கனைகள் தாங்கள் பங்கேற்கும் போட்டிகள் அங்கீகாரம் பெற்ற விளையாட்டு சங்கங்கள் மூலம் நடத்தப்படுகின்றதா என்பதை அறிந்து போட்டிகளில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

அத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெறாமல், இவ்வாணையத்தின் பெயர் மற்றும் முத்திரையை பயன்படுத்துவது மற்றும் விதிமுறைகளுக்கு புறம்பாக இவ்வாணையத்தின் பெயரை குறிப்பிட்டு சான்றிதழ்கள் மற்றும் படிவம் வழங்கும் மாநில விளையாட்டு சங்கங்களின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story