2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க ஐஐடி மெட்ராஸ் புது முயற்சி


2024  ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க ஐஐடி மெட்ராஸ் புது முயற்சி
x

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்க ஐஐடி மெட்ராஸ், இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்-உடன் இணைந்து குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனர்.

சென்னை:

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு பத்தாண்டுகளோ, அதற்கும் அதிகமாகவோ தேவைப்படும். இந்த இலக்கை எட்டிப்பிடிக்க தொழில்நுட்ப அடிப்படையிலான வீரர்களின் செயல்திறன் மேம்பாட்டை ஏற்றுக் கொள்வது முக்கியமான ஒன்றாகும்.

அடுத்து வரும் 2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை எட்டிப் பிடிக்க, குறிப்பிட்ட சில முக்கிய விளையாட்டுகளை இந்திய அரசு பட்டியலிட்டு, அவற்றுக்கான முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வில்வித்தை, குத்துச்சண்டை, பேட்மிண்டன், மல்யுத்தம், ஹாக்கி, பளுதூக்குதல், சைக்கிள் பந்தயம், தடகளம் போன்ற விளையாட்டுகள் இதில் அடங்கும்.

இந்நிலையில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் உடன் இணைந்து, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனர்.

ஸ்மார்ட்பாக்சர் என்ற குறைந்த செலவில் அமைக்கப்பட்ட பகுப்பாய்வுத் தளம், அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் வீடியோ கேமராக்களைப் பயன்படுத்தி குத்துச்சண்டை மதிப்பீடுக்கான நான்கு முக்கிய அம்சங்களைக் கணக்கிட்டு, குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்ய உதவும்.

விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் பல பதிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்பாக்சர் என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி உள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களின் போட்டித் திறனை மேம்படுத்த இது உதவும். இதனை குறிக்கோளாகக் கொண்டுதான் ஸ்மார்ட்பாக்சர் மென்பொருளை ஐஐடி மெட்ராஸ் மேம்படுத்தி வருகிறது.

இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் ரங்கநாதன் ஸ்ரீனிவாசன் கூறும்போது,

பயிற்சியாளருக்கும், உயர்நிலை விளையாட்டு வீரருக்கும் இடையே செயல்திறனை அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், ஆக்கபூர்வமாக மேம்படுத்தவும் தற்போது உருவாக்கப்பட்டு உள்ள தொழில்நுட்பம் பாலமாக செயல்படும். ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வெல்லும் இந்திய அரசின் லட்சிய இலக்கை அடைய ஐஐடி மெட்ராஸ் மேற்கொண்டு இருக்கும் பல்வேறு முன்முயற்சிகளில் ஸ்மார்ட்பாக்சரும் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.

இண்டர்நெட்-ஆப்-திங்ஸ் அடிப்படையிலான மேற்கொள்ளப்படும் தயாரிப்புகள்,

  1. பஞ்ச்-ன் வேகத்தை ஆய்வு செய்யும் வகையில் சென்சாருடன் கூடிய கையுறைகள்
  2. தரை வினை விசையைப் பதிவு செய்வதற்காக, வயர்லெஸ் ஃபுட் இன்சோலுடன் கூடிய அழுத்தமானி
  3. விளையாட்டு வீரர்கள் உடலின் கீழ்பகுதியில் இயக்கத்தைப் பதிவு செய்வதற்காக வயர்லெஸ் இ.எம்.ஜி. சென்சார்கள்
  4. விளையாட்டு வீரர்கள் உடலின் மேல்பகுதியில் இயக்கத்தைப் பதிவு செய்வதற்காக இயக்கசக்தி அளவீட்டு அலகு

மேலும் குத்துச்சண்டை வளையத்தில் வைக்கப்படும் வீடியோ கேமராக்கள் வீரரின் இடது, வலது கைகளை அடையாளம் காண்பதுடன், தாக்குதல், தற்காப்பு, பாசாங்கு ஆகியவற்றை வகைப்படுத்தும்.



Next Story