இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட்- மத்திய அரசு அதிரடி நடவடிக்கை


இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட்- மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Dec 2023 6:19 AM GMT (Updated: 24 Dec 2023 6:57 AM GMT)

பிரிஜ் பூஷணின் விசுவாசியான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டி முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், பிரிஜ் பூஷணை கைது செய்ய கோரி கோரிக்கை முன்வைத்தனர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார்.

இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை சந்தித்து வலியுறுத்தினர். அதேவேளை, பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது விசுவாசியான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால் போராட்டத்தை முன்னின்று நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார்.

இந்நிலையில் புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் புகாருக்குள்ளான பிரிஜ் பூஷண் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாக தேர்வானதற்கு வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.


Next Story