ஆசிய விளையாட்டு: ஆண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்


ஆசிய விளையாட்டு:  ஆண்கள்  கபடி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
x
தினத்தந்தி 7 Oct 2023 9:07 AM GMT (Updated: 7 Oct 2023 10:18 AM GMT)

ஆசிய விளையாட்டு தொடரில் ஆண்கள் கபடி இறுதிப்போட்டி நிறுத்தி வைக்கப்படும் அளவுக்கு பரபரப்பாக சென்ற நிலையில், இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.

ஹாங்சோவ்,

இந்தியா - ஈரான் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் நடுவர்களின் முடிவுக்கு இரு அணிகளுமே ஆட்சேபம் தெரிவித்ததால் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

20 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி நிறுத்திவைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போட்டி முடிவதற்கு 2 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், போட்டியில் இந்த திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நடுவர்கள் முடிவு எடுக்க முடியாமல் திணறி வந்ததால் போட்டியின் முடிவு அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு தொடரின் கபடி போட்டியில் ஈரான் தங்கம் வென்றது. இந்தியா இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து தங்க பதக்கத்தை தவற விட்டது. இதனால், இந்த இறுதிப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் போட்டி நிறுத்தி வைக்கப்படும் அளவுக்கு உச்ச கட்ட பரபரப்பை எட்டியது. இரண்டு அணிகளுமே 26 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. இந்த பரபரப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஈரான் அணியை 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்று இருக்கிறது.


Next Story