சென்னையில், மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டி செப்டம்பர் மாதம் நடக்கிறது


சென்னையில், மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டி செப்டம்பர் மாதம் நடக்கிறது
x

இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் 24 வீராங்கனைகள் நேரடியாக பங்கேற்பார்கள்.

சென்னை

பெண்களுக்கான டபிள்யூ.டி.ஏ. சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி செப்டம்பர் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடக்கிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் 24 வீராங்கனைகள் நேரடியாக பங்கேற்பார்கள். 4 பேருக்கு வைல்டு கார்டு சலுகை வழங்கப்படும். 4 பேர் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை அடைவார்கள். இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகள் களம் காண்கிறார்கள்.

ஆண்களுக்கான சென்னை ஓபன் டென்னிஸ் 2017-ம் ஆண்டு வரை சென்னையில் நடந்தது. அதன் பிறகு இந்த போட்டி புனேவுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் சர்வதேச டென்னிஸ் மீண்டும் சென்னைக்கு திரும்புகிறது. பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி இந்தியாவில் நடப்பது 2008-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.26 லட்சம் பரிசுத்தொகையுடன், 280 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும். இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடி ரூ.9½ லட்சத்தை பரிசாக பெறுவார்கள்.

காணொலி வாயிலாக இந்த தகவலை நேற்று நிருபர்களிடம் தெரிவித்த தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ், 'உலக தரவரிசையில் டாப்-100 இடத்தில் உள்ள பல வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா, கர்மான் தண்டி வைல்டு கார்டு பெறுவார்கள். மற்ற போட்டிகளின் அட்டவணை மற்றும் உடல்தகுதியை பொறுத்து சானியா மிர்சா இந்த போட்டியில் கலந்து கொள்வது முடிவாகும்' என்றார்.


Next Story