இந்தியா- இலங்கை மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்


இந்தியா- இலங்கை மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 11 March 2022 9:07 PM GMT (Updated: 11 March 2022 9:07 PM GMT)

இந்தியா- இலங்கை மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்குகிறது.

பெங்களூரு,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தியாவில் அரங்கேறும் 3-வது பகல்-இரவு டெஸ்ட் இதுவாகும். இதற்கு முன்பு நடந்துள்ள இரு டெஸ்டுகளிலும் வாகை சூடியுள்ள இந்தியா மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் ஆயத்தமாகியுள்ளது.

தொடக்க டெஸ்டில் இந்திய அணி இலங்கையை வெறும் 3 நாளில் சுருட்டி வீசியது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் விளாசியதுடன், மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹீரோவாக ஜொலித்தார். ஹனுமா விஹாரி, விராட் கோலி, ரிஷாப் பண்ட், அஸ்வின் ஆகியோரும் பேட்டிங்கில் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

கோலியின் ஏக்கம் தணியுமா?

முன்னாள் கேப்டனான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து 28 மாதங்கள் ஆகி விட்டது. அதாவது 68 சர்வதேச இன்னிங்சில் மூன்று இலக்க ஸ்கோர் பக்கமே செல்லவில்லை. அரைசதங்களை நொறுக்குகிறாரே தவிர அதை பெரிய ஸ்கோராக மாற்றுவதில் தடுமாறுகிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அவரது சொந்த ஊர் மைதானம் என்பதால் இங்குள்ள சூழல் அவருக்கு அத்துப்பிடி. அத்துடன் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் முழுமையாக அனுமதிக்கப்பட இருப்பதால் களத்தில் அவரது உத்வேகம் நிச்சயம் அதிகரிக்கும். அதனால் நீண்ட கால சதம் ஏக்கத்தை அவர் தணிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

கொரோனா பாதிப்பு மற்றும் பின்னங்கால் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ள சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல் இந்த டெஸ்டில் களம் காணுவார் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ‘பிங்க் பந்து’ டெஸ்டில் அக்‌ஷர் பட்டேல் 11 விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்தை துவம்சம் செய்தார். பெங்களூரு ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு உகந்தது என்பதால் அக்‌ஷர் பட்டேலின் சுழல் ஜாலம் எதிரணிக்கு குடைச்சலை கொடுக்கும். அவருடன் அஸ்வின், பும்ரா, ஜடேஜா ஆகியோரும் மிரட்ட காத்திருக்கிறார்கள். இந்திய அணி இந்த ஆண்டில் உள்ளூரில் விளையாடப்போகும் கடைசி டெஸ்ட் இது என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்வதில் நமது வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

நிசாங்கா விலகல்

திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி மொகாலி டெஸ்டில் இரு இன்னிங்சிலும் 200 ரன்களை தொட முடியாமல் பணிந்தது. அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக நல்ல பார்மில் உள்ள பதும் நிசாங்கா முதுகு வலி காரணமாக விலகியுள்ளார். அவர் தொடக்க டெஸ்டில் முதல் இன்னிங்சில் 61 ரன் எடுத்திருந்தார். இதே போல் கணுக்கால் காயத்தில் இருந்து மீளாத துஷ்மந்தா சமீரா, லாஹிரு குமாரா ஆகியோரது பெயரும் இந்த டெஸ்டில் பரிசீலிக்கப்பட மாட்டாது.

அதே சமயம் முன்னணி பேட்ஸ்மேன் குசல் மென்டிஸ், தசைப்பிடிப்பில் இருந்து குணமடைந்திருப்பது அவர்களுக்கு சற்று ஆறுதலான செய்தியாகும். அந்த அணி கேப்டன் கருணாரத்னே, மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோரைத் தான் பேட்டிங்கில் மலைபோல் நம்பி இருக்கிறது. அவர்கள் மீண்டும் சொதப்பினால் இந்த டெஸ்டிலும் 3 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிப்பது கடினம் தான். வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதால் அவரை வெற்றியோடு வழியனுப்ப இலங்கை வீரர்கள் மேலும் துடிப்புடன் செயல்படுவார்கள் என்று நம்பலாம்.

மைதான கண்ணோட்டம்

பெங்களூரு மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 23 டெஸ்டுகளில் இந்தியா 8-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், 9-ல் டிராவும் சந்தித்துள்ளது. இலங்கை அணி இங்கு 1994-ம் ஆண்டு ஒரே டெஸ்டில் விளையாடி அதிலும் இன்னிங்ஸ் தோல்வி கண்டது. 2007-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 626 ரன்கள் குவித்தது ஓர் அணியின் அதிகபட்சமாகும்.

2018-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 103 ரன்னில் சுருண்டது குறைந்த ஸ்கோராகும். இந்த மைதானத்தில் மொத்தம் 32 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் 2012-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி 103 ரன்கள் எடுத்ததும் அடங்கும்.

பிற்பகல் 2 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: மயங்க் அகர்வால், ரோகித் சர்மா (கேப்டன்), ஹனுமா விஹாரி, விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷர் பட்டேல் அல்லது முகமது சிராஜ், பும்ரா, முகமது ஷமி.

இலங்கை: திமுத் கருணாரத்னே (கேப்டன்), திரிமன்னே, குசல் மென்டிஸ், மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, அசலங்கா அல்லது தினேஷ் சன்டிமால், டிக்வெல்லா, சமிகா கருணாரத்னே, சுரங்கா லக்மல், எம்புல்டெனியா, பிரவீன் ஜெயவிக்ரமா.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
அணுகுமுறையில் மாற்றம் அவசியம்- பும்ரா

இந்திய அணியின் துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிங்க் பந்து டெஸ்ட் கிரிக்கெட் (பகல்-இரவு) போட்டியில் எத்தகைய அணுகுமுறை தேவை என்பதில் இன்னும் நாங்கள் கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் என்ற முறையில் முடிந்த வரை சூழலுக்கு தக்கபடி நம்மை சீக்கிரம் தகவமைத்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். பீல்டிங்கின் போது பிங்க் பந்து வித்தியாசமாக தோன்றும். நீங்கள் நினைத்ததை விட பந்து வேகமாக கைக்கு வந்து விடும். வழக்கமான டெஸ்ட் போட்டியில் காலையில் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும். ஆனால் பகல்-இரவு டெஸ்ட் பிற்பகலில் தொடங்குவதால் அந்த சமயத்தில் பந்து பெரிய அளவில் ‘ஸ்விங்’ ஆகாது. ஆனால் மாலைப்பொழுதில் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்ய முடியும். இது போன்ற விஷயங்கள் குறித்து நாங்கள் ஆலோசித்து இருக்கிறோம். நாங்கள் அதிகமான பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. இதுவரை எதிர்கொண்ட 3 போட்டிகளையும் வெவ்வேறு விதமான சீதோஷ்ண நிலையில் விளையாடி இருக்கிறோம். எனவே இத்தகைய போட்டிக்கு, இந்த மாதிரி தான் நம்மை மாற்றிக்கொண்டு தயாராக வேண்டும் என்று குறிப்பிட்ட எந்த அளவுகோலும் வைக்க முடியாது. இதுவரை கிடைத்துள்ள அனுபவங்களை பகிர்ந்து அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க முயற்சிக்கிறோம். ஆடுகளத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம்.

இவ்வாறு பும்ரா கூறினார்.

Next Story