சரிவர தேர்வு எழுதாததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

சரிவர தேர்வு எழுதாததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-08-11 22:46 GMT
கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூரை அடுத்த செவரப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அல்லி, விவசாயி. இவரது மகன் விக்ரம் (வயது 18), திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நடந்து முடிந்த கல்லூரி தேர்வில் சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமலும், சரியாக சாப்பிடாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று நிலத்திற்கு சென்ற அவர் அன்று இரவு 7 மணி ஆகியும் வீடுதிரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் நிலத்திற்கு சென்று பார்த்த போது விக்ரம் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.

பின்னர் அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விக்ரமை மீட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்