நடிகர் சல்மான்கான் பங்களாவில் வேலை பார்த்த கொள்ளையன் கைது 29 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

நடிகர் சல்மான்கான் பங்களாவில் வேலை பார்த்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார். கடந்த 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் தற்போது சிக்கியுள்ளார்.

Update: 2019-10-10 22:15 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்தவர் சக்தி ராணா(வயது62). இவர் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு தனது கூட்டாளிகளுடன் ஒர்லி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து கொள்ளையடித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தி ராணா உள்பட அவரது கூட்டாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். சில மாதங்கள் கழித்து சக்தி ராணா ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆனால் அவர் ஒர்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து தலைமறைவாகி விட்டார். இதனால் மும்பை கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து, ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதன்பேரில் போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் தலைமறைவான சக்தி ராணா போரிவிலி மேற்கு கோராய் பகுதியில் நடமாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், சக்தி ராணா கோராய் பகுதியில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 15 வருடமாக ஊழியராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்