மே 7-ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மே 7-ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் விடுத்து உள்ளது.

Update: 2018-04-30 14:48 GMT

சென்னை,


முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். மூத்த வக்கீலான இவர், மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் சார்பில் ஆஜரானார். இதற்காக ரூ.1 கோடி வக்கீல் கட்டணமாக பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி நளினி சிதம்பரத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சம்மன் அனுப்பினார்கள்.

இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி நளினி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் 24-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இந்நிலையில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மே 7-ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் விடுத்து உள்ளது.

மேலும் செய்திகள்