சிக்கிமில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி; மத்திய மந்திரி அமித்ஷா இரங்கல்

சிக்கிமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலியான நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-04-04 13:05 GMT



கேங்டாக்,


சிக்கிமில் கேங்டாக்-நாட்டு லா சாலையில் 15-வது மைல்கல் அருகே இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து இந்திய ராணுவ வீரர்கள் மீட்பு பணிக்கு உடனடியாக விரைந்தனர்.

இதில் இதுவரை, 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். எனினும், அவர்களில் 7 பேர் உயிரிழந்து விட்டனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், சிக்கிம் பனிச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.

நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம். தேசிய பேரிடர் மீட்பு படையினர் பாதிப்பு நடந்த பகுதிகளுக்கு விரைந்து செல்வார்கள். காயமடைந்த நபர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்