தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை: 2 மடங்கு விற்று தீர்ந்தன

நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டது. இதையொட்டி மதுபிரியர்கள் மதுபானம் வாங்க அதிக ஆர்வம் காட்டினர்.

Update: 2024-04-17 23:47 GMT

கோப்புப்படம்

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் 17-ந்தேதி (நேற்று) முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் மூடப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. அதேபோல வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4-ந்தேதியும் மதுக்கடைகள் அடைக்கப்பட இருக்கிறது.

எப்போதுமே மதுக்கடைகள் ஒருநாள் மூடினாலே, அதனை மதுபிரியர்கள் தாங்கமாட்டார்கள். அந்தவகையில் தொடர்ந்து 3 நாட்கள் மூடினால் சும்மா விடுவார்களா. இதையடுத்து கடந்த 16-ந்தேதியே மதுக்கடைகள் முன்பு மதுபிரியர்கள் திரண்டனர். வரிசை கட்டி நின்று தேவையான மதுபாட்டில்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர்.

கையில் தூக்கி செல்லமுடியாத அளவு மதுபாட்டில்களை பையில் வாங்கி சென்ற மதுபிரியர்களையும் பார்க்க முடிந்தது. இதனால் மதுக்கடைகள் அன்றைய தினம் திருவிழாக்கோலம் கண்டது. கடைகள் திறந்தது முதல் மூடப்படும் வரை மதுக்கடைகள் பரபரப்பாகவே செயல்பட்டன. பல இடங்களில் அடைக்கப்பட்ட கடைகள் முன்பும் மதுபிரியர்கள் ஏக்கத்துடன் சுற்றி திரிந்ததை பார்க்க முடிந்தது. அந்தவகையில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மது விற்பனை பண்டிகை காலங்களை போன்ற விற்பனையை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி மட்டுமே ரூ.289.29 கோடிக்கு மது விற்பனை நடந்திருக்கிறது.

இதுகுறித்து பேசிய டாஸ்மாக் அதிகாரிகள், "டாஸ்மாக் விற்பனை ஏப்ரல் 16-ந்தேதி அதிகம். அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.68.35 கோடி விற்பனை ஆனது. திருச்சி மண்டலத்தில் ரூ.58.65 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.57.30 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.55.87 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.49.10 கோடி என ஒரே நாளில் ரூ.289.29 கோடிக்கு விற்பனை ஆனது. தமிழகத்தில் வழக்கமான நாட்களை காட்டிலும், ஏப்ரல் 16-ந்தேதி நடைபெற்ற விற்பனை 2 மடங்கு அதிகமாகும்" என்று கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்