அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம்: தேர்தல் கமிஷன் ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகம்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பான தேர்தல் கமிஷன் ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான நிலை உருவாகி இருப்பதாக தெரிகிறது.

Update: 2023-04-19 23:54 GMT

புதுடெல்லி,

அ.தி.மு.க.வை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெறுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த ஒரு உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனாலும் இதை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காத நிலை இருந்துவந்தது. தேர்தல் கமிஷன் இதை அங்கீகரிக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.

வலியுறுத்தல்

ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட வேண்டும் என தேர்தல் கமிஷனில் மனு அளித்தார். அதேநேரத்தில் தேர்தல் கமிஷனுக்கு இது தொடர்பாக உத்தரவிடக் கோரி டெல்லி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக உடனடியாக அங்கீகாரம் தந்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கவேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

தேர்தல் கமிஷன் ஆலோசனை

இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் உரிய முடிவை எடுத்து 21-ந் தேதிக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கான காலக்கெடு நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

இதை கருத்தில்கொண்டு தேர்தல் கமிஷன் இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தியது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் காலையிலும், மாலையிலும் 2 கட்ட அமர்வுகளில் இது தொடர்பாக ஆலோசித்தனர். இதில் கட்சி அங்கீகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகம்?

அந்த முடிவுகளை இன்று அல்லது நாளை டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் கமிஷன் ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்