சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

பண மோசடி வழக்கில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

Update: 2022-07-03 00:12 GMT

கடன் மோசடி

சென்னை தியாகராயநகரில் இயங்கி வந்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் கடந்த 2017-ந்தேதி இந்தியன் வங்கியில் ரூ.240 கோடி கடன் பெற்றது. இந்த கடனை முறைகேடாக பெற்று மோசடி செய்துள்ளதாக வங்கியின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கே.எல்.குப்தா சி.பி.ஐ.யில் புகார் அளித்தார்.

அதன்பேரில் பங்குதாரர்கள் சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடைகளுக்கு 'சீல்'

இந்தியன் வங்கியில் பெற்ற கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.480 கோடி ஆனது. இதையடுத்து இந்தியன் வங்கி தரப்பில் சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை தியாகராயநகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 2 கடைகளின் பொருட்களை ஜப்தி செய்து, கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி கடந்த ஜனவரி மாதம் 2 கடைகளுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.

சொத்துகள் முடக்கம்

பண மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.234 கோடியே 75 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்