விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை: மரக்காணத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று மழை பெய்தது. இதனால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-19 16:31 GMT


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. விழுப்புரம், கோலியனூர், வளவனூர், முண்டியம்பாக்கம், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர் என்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

உப்பளத்தில் தண்ணீர்

மேலும் மாவட்டத்தில் கடலோர பகுதியான மரக்காணம் பகுதியிலும் மழை பெய்தது. இதனால் மரக்காணம் உப்பளத்தில் உள்ள பாத்திகளில் மழைநீர் தேங்கி உள்ளது. எனவே உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. வழக்கமாக இங்கு ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரைக்கும் உப்பு உற்பத்தி நடைபெறும். ஆனால் தற்போது மழையால் பாத்திகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், உற்பத்தியை உடனடியாக தொடங்கிவிட முடியாது. குறைந்தது 10 நாட்களுக்கு மேல் ஆகும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதனால் இதை சார்ந்துள்ள தொழிலாளர்கள் வேலையை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கடையே நேற்று பகலில் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கமின்றி, வானில் மேக கூட்டங்களளுடன் காட்சியளித்தது. ஒரு சில இடங்களில் மழை தூறியது.

Tags:    

மேலும் செய்திகள்